
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் உள்ளது அய்யன் ஏரி. 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியின் ஒரு கரையில் மாநகராட்சியின் 11-வது வார்டுக்கு உட்பட்ட பூம்பொழில் நகரும், மற்றொரு கரையில் 6-வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகரும், இன்னொரு கரையில் 7-வது வார்டுக்கு உட்பட்ட திருமலைவாசன் நகரும் உள்ளன.
இந்த ஏரி பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி நீரை அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் ஆரம்ப காலத்தில் விவசாயம் செய்வதற்கும், குடிநீராகவும் பயன்படுத்தினர். பின்னர், நாளடைவில் வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் விவசாயம் நலிவடைந்து. இதன் பிறகு அப்பகுதி விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக விற்பனை செய்துவிட்டனர்.
தற்போது, இந்த ஏரியை சுற்றி ஏராளமான வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், சிலர் ஏரியை சுற்றி உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்புகளை கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: திருமலைவாசன் நகர், பூம்பொழில் நகர், அசோக் நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக அய்யன் ஏரி உள்ளது. ஏரி வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் குறைந்து வறட்சி ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் ஏரியை சுற்றி உள்ள புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து ஏழை, எளிய மக்களுக்கு விற்பனை செய்தனர். தற்போது, ஏரியை சுற்றி பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும், ஏரியை சுற்றி உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் விடப்படுகின்றன. அத்துடன், ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனூர் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து அகற்றப்படும் கழிவுநீரை நள்ளிரவில் லாரிகள் மூலம் ஏரியில் விடுகின்றனர். இதனால், ஏரி நீர் மாசடைந்துள்ளது.
முன்பு இந்த ஏரிக்கு அதிகளவில் பறவைகள் வரும். பார்ப்பதற்கு பறவைகள் சரணாலயம்போல் காட்சி அளிக்கும். ஆனால், தற்போது பறவைகளின் வரத்து குறைந்து விட்டது. கடந்த பல ஆண்டுகளாக அய்யன் ஏரியை பொதுப் பணித்துறை அதிகாரிகள் பராமரிக்காமல் உள்ளனர். பல ஆண்டுகளாக தூர்வாரி ஆழப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், மழை நீரை ஏரியில் முழுமையாக சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அதிகரித்து வரும் குடியிருப்புகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் நிலத்தடி நீர் பிரச்சினையை தீர்க்க இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். இதன்மூலம், மழை காலங்களில் தண்ணீரை அதிக அளவில் சேமிக்க முடியும். ஏரியை சுற்றி உள்ள கரைகளை பலப்படுத்த வேண்டும்.
மேலும், ஏரிக்கரையில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய நடைபாதை, குழந்தைகள் விளையாட சிறுவர் பூங்கா, படகு சவாரி செய்ய படகு குழாம் உள்ளிட்ட வசதிகளை அமைத்து தர வேண்டும். இதன் மூலம், பொதுமக்களுக்கு பொழுது போக்கு இடமாகவும் மாறும். ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரியை பசுமைப் பூங்காவாக மாற்றியதுபோல, அய்யன் ஏரியையும் பசுமைப் பூங்காவாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இக்கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து அரசு ஒப்புதலுடன் ஏரியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.