கிங்ஸ்டவுன்: டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனை அந்த நாட்டு ரசிகர்கள், மக்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் மனதார புகழ்ந்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறும் நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் அணி இருக்கும் என மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் உலக ஜாம்பவான்களில் ஒருவருமான பிரையன் லாரா கணித்திருந்ததார். இதனை கடந்த மே மாதம் அவர் சொல்லி இருந்தார்.
அது போலவே ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதும் அதனை அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் நினைவு கூர்ந்துள்ளார். “நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறுவோம் என கணித்த ஒரே ஒரு நபர் பிரையன் லாரா மட்டும்தான். அவரது கணிப்பு சரி என்பதை நாங்கள் நிரூபித்துக் காட்டி உள்ளோம்.
நாங்கள் இந்த தொடரின் வரவேற்பு விருந்தின் போது அவரை சந்திக்கும வாய்ப்பை பெற்றோம். நாங்கள் உங்கள் வார்த்தைகளை மெய்பிப்போம் என அவரிடம் அப்போது நான் சொல்லி இருந்தேன்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவனிடமிருந்து இது போன்ற சிறந்த கருத்தை நாம் பெறுவது என்பது ஒரு அணியாக நமக்கு சிறந்த உத்வேகத்தை தரும். அதற்கு நாங்கள் தகுதியானவர்கள் என்பதை நிரூபித்துள்ளோம்” என வங்கதேசத்தை வீழ்த்திய பிறகு அவர் தெரிவித்திருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.