அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்ட போது சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சீமானிடம் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது.
ரஜினிகாந்த்தை சரமாரியாகத் தாக்கிய சீமான், சிந்திக்கும் வகையில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ரஜினிகாந்த் குறித்து பல்வேறு கருத்துகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவு செய்துள்ளார்.
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளில் ஒருவருக்கு கூட தகுதி இல்லையா?
45 ஆண்டுகளுக்கு நடித்து வரும் ரஜினிக்கு மன்றம் வைத்து சேவை செய்து வந்த ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவருக்குக் கூடவா இப்போது அரசியல் கட்சியில் பொறுப்பு வழங்க முடியவில்லை. ஒருவருக்குக்கூடவா தகுதி இல்லை?
இதுதான் ஆன்மீக அரசியலா?
காங்கிரஸ் தொடங்கிப் பல கட்சிகளுக்குத் தாவிச் சென்று வந்த தமிழருவி மணியனும், பாஜகவில் அறிவுசார் பிரிவு என்பதின் தலைவர் அர்ஜூன மூர்த்தி ஆகியோரை வைத்துத்தான் மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறீர்களா ரஜினி? அர்ஜூன மூர்த்தி தீவிர இந்துத்துவா வாதி.
விஜயகாந்த் வீரர்: ஆளில்லாத பொட்டலில் கம்பு சுற்றவது ரஜினிக்கு வீரமா…?
வெற்றிடம் என்று சொல்லிக் கொண்டு, சிஸ்டத்தை மாற்றவேண்டும் என ஜனவரியில் கட்சித் தொடங்கி, பிப்ரவரி பிரச்சாரம் செய்து, மார்ச் மாதம் முதல்வராகி விடுவாராம். இவர் நம் மக்களை என்னவென்று நினைக்கிறார். மானங்கெட்ட கூட்டம் என நினைக்கிறார் ரஜினி. விஜயகாந்த் வீரர், கருணாநிதி ஜெயலலிதா இருக்கும்போதே களத்திற்கு வந்தார்.
30 நாளில் முதல்வராவது எப்படி: ரஜினியிடம் நாம் கற்க வேண்டும்!
ரஜினியுடன் இருப்பவர்கள் அவரை கைப்பிள்ளை மாதிரி இறக்கி விடுகிறார்கள். இதையடுத்து இவரும் உடனே அரசியலுக்கு வருகிறார். அமித் ஷா வந்தபின்தான் அரசியலுக்குள் வருவதை ரஜினி உறுதி செய்திருக்கிறார். எனக்கு ஒரு கேள்வி, ரஜினியின் தேவை இந்த நாட்டு மக்களுக்கு எங்கு உள்ளது. குருமூர்த்தி, மீடியா, பாஜகவிற்கு மட்டும்தான் ரஜினி அரசியல் வருகையின் தேவை உள்ளது.
மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்ட போது எங்கிருந்தார் ரஜினி?
நான் தெரு தெருவாகச் சென்றிருக்கிறேன். யாரும் ரஜினி வேண்டும் எனக் கேட்கவே இல்லை. மொழி பிரச்சினை, வேளாண் பிரச்சினை, என எதற்கு அவர் குரல் கொடுத்தார். அரசியலுக்கு வரும் ரஜினி முதலில் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். கண்ணோட்டத்தைத் தெரிவிக்க வேண்டும். அதைவிடுத்து சிஸ்டம் சரியில்லை. மாற்றம் வேண்டும் என பொதுவாக எதையும் சொல்லக் கூடாது.
மோடிக்கு பதில் ரஜினி பிரதமரானால் என்ன?
இவ்வளவு பெரிய ஆளுமையாக இருக்கும் ரஜினி ஏன் இந்தியாவிற்குப் பிரதமராகாமலிருக்கிறார். பாஜக நாட்டு மக்கள் அனைவரையும் பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டது. இந்த சூழலில் இந்தியாவிற்கு நல்லாட்சி தேவை. ரஜினியைப் பிரதமராக்குவதுதான் சரி என நாங்கள் முடிவு செய்துள்ளோம். மோடிக்கு மாற்றாக ரஜினி பிரதமராகட்டும்.
ஆன்மீகத்தில் மதச்சார்பின்மை எப்படி வரும்?
ஆன்மீகத்தில் மதசாற்றபற்ற அரசியல் எங்கிருந்து வருகிறது. அதை சொல்லுங்கள் முதலில். ஆன்மீகம் என்றால் இமயமலைக்குச் சென்று செய்வது. இல்லையென்றால் ரஜினி நித்தியானந்தாவைப் போல் செல்ல வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு எதையாவது சொல்லிவிடுவது.
கடுமையாக ரஜினியை நாங்கள் எதிர்ப்போம்!
எங்களுக்கு ரஜினி தேவையே இல்லை. நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள். மானத் தமிழரா..?
மராட்டியரா..? என இப்போது சண்டை நடக்கும். யார் வந்தாலும் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். இந்த மண்ணின் பிள்ளைகளுக்கு இல்லாதது உங்களுக்கு என்ன வந்தது எனவும் வேண்டுமென்றால் மகாராஸ்டிராவில் கட்சி ஆரம்பியுங்கள் என காரசாரமாக கூறினார்.