வரலாற்றில் இன்று:பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்

தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -பாவேந்தர் பாரதிதாசன்

புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன், ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில் செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபில், பெரிய வணிகராயிருந்த, கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.
சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும், தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே, கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும், முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின், இரண்டாண்டில், கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவர் அரசினர் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும், நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில், விருத்துக்குப் பின், சி. சுப்பிரமணிய பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே, அவரை, பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. ஆயினும் அதற்குமுன்பே அவர் பாரதியாரைச் சந்தித்திருப்பது பாரதியார் தாமே எழுதின தராசு என்ற தொடரில் பாரதிதாசனைப் பெயர் சுட்டாமே ஒரு கைக்கோளச் சாதித் தமிழ்க்கவிராயர் தம்மிடம் வந்து எங்கெங்குக் காணினும் சக்தியடா- தம்பி ஏழு கடல் அவள் மேனியடா!” என்று ஒரு பாடலைப்பாடிக் காட்டியதாகக் கூறியிருப்பது இவரே அந்தக் கவிராயர் என்று உறுதிப்படுத்துகிறது.

“தன் நண்பர்கள் முன்னால் பாடு” என்று பாரதி கூற, பாரதிதாசன் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று ஆரம்பித்து, இரண்டு பாடல்களைப் பாடினார். இவரின் முதற் பாடல், பாரதியாராலேயே ‘சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது’ என்றெழுதப்பட்டு, ‘சுதேசமித்திரன்’ இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், “கண்டழுதுவோன்”, “கிறுக்கன்”, “கிண்டல்காரன்”, “பாரதிதாசன்” என, பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946, சூலை 29இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் “புரட்சிக்கவி” என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன், நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு, 1969ல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடைமையாக்கப்பட்டன.
தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடியவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
பாவேந்தர் பாரதிதாசன் ஏப்ரல் 21, 1964 அன்று காலமானார். பாரதிதாசன் நினைவாக ஆண்டுதோறும் தமிழ் கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.
இந்திய அஞ்சல் துறையினர் பாவேந்தர் பாரதிதாசனுக்கு நினைவார்த்த அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 21
பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் குறித்து அஞ்சல்தலை சேகரிப்பாளரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனருமான விஜயகுமார் எடுத்துரைத்தார்.

Leave a Reply

error: Content is protected !!