மருத்துவ மாணவர்களுக்காக ஆம்ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் தமிழக அரசுக்கு கோரிக்கை :

தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலாக கட்டணத்தை வசூல் செய்யும் அரசு மருத்துவக் கல்லூரிகள்!
அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை குறைக்கக் வேண்டும்!!
தமிழக முதல்வருக்கு ஆம்ஆத்மிகட்சி தமிழக தலைவர் வசீகரன் வேண்டுகோள்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை தமிழக சட்டமன்றத்தில் சட்டம் ஒன்றை கொண்டு வந்து 2013 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது.
அந்த பல்கலைக் கழகத்தின் கிழ் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக் கல்லூரியும் இயங்கி வருகிறது.

தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் அவற்றிற்கு மாணவர் சேர்க்கையும் 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ,கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும் என துணை முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்தார்.
அது கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் தற்பொழுது செயல்பட்டு வருகிறது..
ஆனால் அக்கல்லூரியின் கல்விக் கட்டணம் ஏற்கனவே இருந்த அளவிற்கே ரூ 5.44 லட்சம் என நிர்ணயிக்கப் பட்டு வசூல் செய்யப்படுகிறது.

சென்ற ஆண்டு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ,
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் ,
சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கின் மூலம், பிற தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலாக வசூல் செய்யப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு கல்வி கட்டணம் ரூ 4 லட்சம் என அரசு மாணவர் சேர்க்கை குறிப்பேட்டில் வெளியிட்டது. ஆனால், அதை ரூ 5.44 லட்சமாக அதிகரித்து ,
12.11.2020 அன்று அரசு மீண்டும் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாளாக (இன்று) 30.11.202 யை நிர்ணயித்துள்ளது. இது கடும் கண்டனத்திற் குரியது.

அதேபோல், ஈரோடு மாவட்டம், IRT பெருந்துறை மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்று நடத்தி வருகிறது. தற்பொழுது அது, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படுகிறது.
அக்கல்லூரிக்கான கட்டணமாக
ரூ 3.85 லட்சம் நிர்ணயிக்கப்
பட்டுள்ளது. இக்கட்டணத்தை செலுத்த முடியாமல் பெற்றோர்கள் மிக சிரமப்படுகின்றனர்.

இந்த மருத்துவக் கல்லூரிகளையும், இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்ற பிறகு, அவை அரசு மருத்துவக் கல்லூரிகளாக செயல்படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைத் தான், இக்கல்லூரிகளிலும் அரசு வசூல் செய்ய வேண்டும்.
அதை செய்யாமல், தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலாக கட்டணத்தை வசூல் செய்வது சரியல்ல.

தமிழக அரசே, வசதி படைத்தோருக்காக ,
தனியாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும்,
ஒரு பல் மருத்துவக் கல்லூரியையும் நடத்துவது போல், இது உள்ளது.
இது சமூக நீதிக்கும், ஏழை – எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எதிரானது.

எனவே, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணமான
ரூ 13,670 யை ,இந்த இரு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும்.

கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு (பழைய பெயர் இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி) , அரசு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமான
ரூ 11,610 யை மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.

இக் கல்லூரிகளில் பயிலும் முது நிலை மருத்துவம்/ முது நிலை பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் ,
இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைக்க வேண்டும்.

கட்டணத்தை கட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் போக்கை இக் கல்லூரிகளின் நிர்வாகங்கள் உடனடியாக கைவிட வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசே ஏற்றது போல்,
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவையும் அரசே ஏற்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தொழிற் கல்லூரிகளில் பயிலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிட ,தனி நிதியத்தை ( முதலமைச்சர் நிவாரண நிதி போல் ) அரசு உருவாக்கிட வேண்டும்.

“போஸ்ட் மெட்ரிக்” கல்வி உதவித்
தொகையையும் முறையாக வழங்கிட வேண்டும்.அதை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த உதவித் தொகையை பெறுவதற்கான வருமான வரம்பை
ரூ 2 லட்சத்திலிருந்து ,
ரூ 8 லட்சமாக அதிகரிக்க வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின், கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளது. அவற்றை பாதியாகக் குறைக்க வேண்டும்.

மருத்துவ மாணவர்களின் எதிரகால நலனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை தாமதிக்காமல் உடனடியாக நிறைவேற்றிட ஆவன செய்திட வேண்டும் என்று தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!