தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சியில் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. மக்கள் யாரும் நிம்மதியாக இருக்க முடியவில்லை என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்குள்ள ஓட்டலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு வேண்டுதல் காரணமாகவே வேல் காணிக்கை செலுத்தினேன். விரைவில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்திப்பேன். அ.தி.மு.கவை கைப்பற்றுவீர்களா என்று கேட்கிறீர்கள். நான் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறேன் எங்கள் கட்சி அ.தி.மு.க.தான்.
இந்த ஓராண்டு கால ஆட்சியில் தி.மு.க. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு இரவில் பாதுகாப்பு இல்லை. இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் தனியே செல்ல முடியவில்லை. இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. காவல் நிலையங்களில் தி.மு.க.வினரால் கட்டப் பஞ்சாயத்து நடைபெற்று வருவதால் மக்கள் யாரும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இதனால் தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சியில் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசு அதிகாரிகளும் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு செல்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. இனி அரசு இதுபோல் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் எந்த குறையும் இருந்தது கிடையாது. அதேபோன்று ஆட்சியை கொடுக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் கையில் 5 அடி உயர வெண்கல வேலுடன் கோவிலுக்குள் சென்று மூலவர் சன்னதியில் விஸ்வரூப தரிசனம் செய்தார். தொடர்ந்து பஞ்சலிங்கம், சண்முகர் சன்னதியில் தரிசனம் செய்த அவர், வேலுடன் வள்ளி குகைக்கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து 5 அடி உயர வெண்கல வேலினை கோவிலிலுக்கு காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.