“தமிழ்நாடு பெயர் சூட்டக்காரணமாக இருந்த போராளி” சங்கரலிங்கனார் நினைவு நாள்

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி
க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள்

13.10.1956

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள்

13.10.956

1953ஆம் ஆண்டு ‘விசாலா ஆந்திரா’ கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர் பொட்டி சிறிராமுலு. அது போலவே சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டிட மொழிவழித் தமிழ் மாகாணம் அமைத்திட உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்தவர் ஈகி சங்கரலிங்கனார் ஆவார்.

இவர் விருதுநகரில் 1895ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி – வள்ளியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் திருமால் நாடார் ஓலைப் பள்ளியிலும் , சத்திரிய வித்தியா பள்ளியிலும் தொடக்கக் கல்வியை கற்றார். ஞானாதிநாத நாயனார் பள்ளியில் எட்டாம் வகுப்போடு இவரின் படிப்பு நின்றுபோனது.

இளம் அகவையிலேயே சங்கரலிங்கனாருக்கு வ.உ.சி.யின் இந்திய விடுதலைப் போர்க்குரலைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுமுதல் தம்மை முழுமையாக இந்திய விடுதலைப் போரிலே ஈடுபடுத்திக் கொண்டார்.

1915இல் செந்தியம்மாள் என்பவரை திருமணம் முடித்தார். 1922இல் காந்தியின் தலைமையில் பேராயக் கட்சி இயங்கிய போது கதர் இயக்கம் தீவிரம் பெற்றது. அப்போது தான் மட்டுமல்லாது தமது குடும்பத்தினரையும் கதராடை உடுக்கச் செய்தார். விருதுநகரில் காதி வஸ்திராலயம் என்ற பெயரில் கடை ஒன்றைத் திறந்து கதர் குறித்து விழிப்புணர்வு ஊட்டினார்.

1925இல் காந்தியை மும்பையில் சந்தித்ததோடு அங்கு சில காலம் தங்கியிருந்து கதர் பரப்புரையை மேற்கொண்டார். 1930இல் காந்தி நடத்திய தண்டி பயணத்திலும் பங்கு கொண்டார்.

தமிழகம் திரும்பிய சங்கரலிங்கனார் திருச்சி, கரூரில் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய விடுதலைக்குப் பிறகும் காந்திய நெறியை வழுவாது கடைபிடித்து வந்தார்.

1955ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் மொழிவாரியாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. அதனோடு இணைந்து சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் கோரிக்கையும் அப்போதே எழுந்தது.

21.7. 1953இல் காங்கிரஸ் சட்ட மன்ற மேலவை உறுப்பினராக இருந்த ம.பொ.சி. அவர்கள் முதன் முறையாக இக் கோரிக்கையை சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு தமிழ் ராஜ்ஜியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அதன்பிறகு 27.4.1954 இல் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் பெண்ணாடத்திலும், அதற்கு அடுத்த மாதத்தில் திருநெல்வேலியிலும் ஆட்சி மொழி மாநாடு நடத்தியது.

இதில் சட்ட மேலவை உறுப்பினர் கசபதி நாயகர், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சென்னை மாகாணத்திற்கு தமிழ் நாடு பெயர் சூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

03.03.1955இல் முத்துராமலிங்கத் தேவர் அவர்களும் சட்டமன்றத்தில் வரவு – செலவு அறிக்கை விவாதத்தில், “இந்தப் பச்சைத் தமிழா்களுடைய ஆட்சியில் இந்த ராஜ்யம் தமிழ்ராஜ்யம் என்று அறிவிக்கப்பட வில்லையானால் என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் 19.1.1956இல் ஜி.உமாபதி இல்லத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தேவிகுளம் பீர்மேடு தாலுக்காக்களை கோரியும், தட்சிணா ராஜ்ஜியத் திட்டத்தை எதிர்த்தும், சென்னை ராஜ்ஜியத்திற்கு தமிழ்நாடு பெயரிடக் கோரியும் 20.2.1956இல் முழு கடை யடைப்பு நடத்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் ம.பொ.சி. அண்ணாதுரை, பாரதிதாசன், கா.அப்பாத்துரையார், சீவானந்தம், சி.பா.ஆதித்தனார் ஆகியோர் பங்கேற்றனர். அதன்படி பிப்.20ஆம் நாளன்று தமிழகமெங்கும் கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தேறியது.

28.3.1956இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் மாநில சீரமைப்பு மசோதா கொண்டு வரப்பட்டது.

அம்மசோதா விவாதத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப.சீவானந்தம் பங்கேற்று தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையின் தேவையை வலியுறுத்திப் பேசினார்.

அன்றைய காமராசர் தலைமையிலான காங்கிரசு அரசோ சென்னை என்றால் தான் வெளியுலகத்திற்கு தெரியும் என்று கூறி பெயர் மாற்றக் கோரிக்கையைப் புறக்கணித்தது.

இந்நிலையிலே தான் சங்கரலிங்கனார் 27.7.1956 அன்று விருது நகரில் ஓலைக்குடிசையில் பேராயக்கட்சி கொடி பறந்திட உண்ணாநிலையைத் தொடங்கினார்.

அவர் நடத்திய உண்ணாநிலைப் போரை பச்சைத் தமிழன் காமராசரின் ஆட்சி அலட்சியப்படுத்தியது.

பிரதமர் நேருவோடு பேசி சங்கரலிங்கனாரின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய காமராசர் செய்தியாளர்களிடம், “இப்படியான பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை. இது மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிற சமாச்சாரம். அவர் முன் வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசோடு தொடர்புடையது” என்று நழுவலாகப் பதிலளித்தார்.

அவரின் உண்ணாநிலைப் போரை நிறுத்தும் படி ம.பொ.சி, அண்ணாதுரை, சீவானந்தம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். அண்ணா அவர்கள் சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்தார். அப்போது, “எல்லையை வாங்க முடியாதா? இதில் என்ன கஷ்டம்? இதய சுத்தியோடு ஆந்திரா சர்க்காருடன் பேசினால் காரியம் நடக்காதா? என்று கண்ணீர் சிந்தியபடி கேட்டதாக அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவரின்
உண்ணாநிலைப் போர் 60 நாட்களைத் தாண்டியும் காமராசரின் கல்மனம் கரையவில்லை.

அப்போது ஜனசக்தி துணையாசிரியர் தியாகி ஐ.மாயாண்டி பாரதிக்கு கடிதம் எழுதினார்.

அதில், “காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது. காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ விருப்பமில்லை” என்று மனம் வெதும்பி எழுதியிருந்தார்.

அவரின் போராட்டத்திற்கு ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சி முழுமையாகத் துணை நின்றது.

நான் இறந்த பிறகு அக்கட்சியினரிடமே உடலை ஒப்படைக்கும் படி சங்கரலிங்கனார் இறுதியாக வேண்டிக் கொண்டார்.

அவர் உயிருக்குப் போராடிய நிலையில் மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையில் அதாவது இன்றைய பெயரான இராசாசி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கும் உண்ணாநிலையை தொடர்ந்தார். அவரின் நாடி நரம்புகள் ஒடுங்கின. 79வது நாளில் அவர் உயிர் பிரிந்தது.

1952இல் பொட்டி சிறிராமுலுவின் மரணம் தெலுங்கர்களை விழிக்க வைத்து ஆந்திரா பெயரில் தனி மாகாணம் கண்டது.

ஆனால் சங்கரலிங்கனாரின் மரணமோ காங்கிரசின் துரோகத்தாலும் திராவிட கட்சிகளின் ‘திராவிட நாடு’ குழப்பத்தாலும் தமிழர்களை தூங்க வைத்தது.

1956இல் ஹைதரபாத் இதர பகுதிகள் ஆந்திராவானது. திருவிதாங்கூர் இதர பகுதிகள் கேரளவானது.

சென்னை மாகாணமோ இதர பகுதிகளோ தமிழ்நாடாக மாற வில்லை.

சரியாக 11 ஆண்டுகள் கழித்து அண்ணா முதல்வரான பிறகே சென்னை மாகாணம் தமிழ்நாடானது.

தமிழர்கள் தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டும் முன்னே தெலுங்கர்கள் தம் நிலத்திற்கு பெயர் சூட்டிய கையோடு சும்மா நிற்க வில்லை. அதற்காகவே உழைத்து மடிந்த பொட்டி சிறிராமுலுவை போற்றிட முன் வந்தனர்.

ஆந்திர அரசு ஹைதரபாத்தில் ‘பொட்டி சிறிராமுலு தெலுங்கு கழகம்’ நிறுவியும், அவர் நினைவாக நெல்லூர் மாவட்டத்தை ‘பொட்டி சிறிராமுலு’ மாவட்டம் என்றும் பெயர் மாற்றம் செய்தது. மத்திய அரசு பொட்டி சிறிராமுலுவிற்கு அஞ்சல் தலையையே வெளியிட்டு விட்டது.

இதை விடப் பெரிய கொடுமை என்னவெனில், “சென்னை இல்லாத ஆந்திரம் தலையில்லாத முண்டம்” என்று பேசிய பொட்டி சிறிராமுலுவிற்கு சென்னையிலேயே நினைவுச் சின்னத்தைக்கூட எழுப்பி விட்டனர்.

பொட்டி சிறிராமுலுவின் ஈகத்திற்கு எந்த விதத்திலும் சங்ரலிங்கனாரின் ஈகம் குறைந்ததல்ல. ஆனால் அவரை தமிழர்களாகிய நாம் என்றாவது கொண்டாடி இருக்கிறோமா? இல்லையே?

அவர் மறைந்து 57 ஆண்டுகள் கடந்துதான் தமிழக அரசு அவருக்கு நினைவுச் சின்னமே எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு பெயர் சூட்டவும், தமிழ்மண் மீட்கவும் போராடிய சங்கரலிங்கனாரை இனிமேலாவது தமிழர்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது.

அவர் நினைவு நாளில் தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்ட தமிழர் தாயகம் வெளியார் ஆதிக்கத்தால் பறிபோகாமல் பாதுகாத்திட உறுதி ஏற்போம்.

நன்றி: மறுமலர்ச்சி தமிழறிஞர்கள் நூலிலிருந்து…

கதிர் நிலவன் தமிழ்த்தேசியன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!