
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை.
சேவ் கேரளா பிரிகேட் அமைப்பின் தலைவர் ரசல் ஜோயை, பொள்ளாச்சியில் சந்தித்தது குறித்து அண்ணாமலை அவர்கள் விளக்கமளிக்க வேண்டும்
கிறிஸ்தவ என் ஜி ஓ க்களின் பின்னணியில் இயங்கி வரும் கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு ரசல் ஜோய், யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று பொள்ளாச்சியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்களை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.
ஒரு கட்சி தலைவரை யார் வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம் என்கிற நியதியின் அடிப்படையில் இது தோற்றமளித்தாலும், இதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பது தெரிய வேண்டும். ஏனென்றால் De Commission முல்லைப் பெரியாறு என்கிற முழக்கத்தை முன்வைத்து மிகப்பெரிய அளவில் கேரளாவில் உள்ள இடுக்கி எர்ணாகுளம் பத்தனம்திட்டா ஆலப்புழா திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து ஏழெட்டு ஆண்டுகளுக்கு மேலாக கடும் பிரச்சாரத்தை நிகழ்த்தி வரும் இந்த ரசல் ஜாய், எந்த அடிப்படையில் அண்ணாமலை அவர்களை சந்தித்தார் என்பது தெரிய வேண்டும்.
இந்த ரசல் ஜோயை பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தது யார் என்பதும் தெரிய வேண்டும். உச்சநீதிமன்றம் கடந்த 2006 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில், முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று கொடுத்த இரண்டு தீர்ப்புகளுக்கு எதிராக, வதந்திகளை தொடர்ந்து பரப்பி வரும் இந்த ரசல் ஜோயின் வழக்கறிஞர் அந்தஸ்தை இந்திய பார் கவுன்சில் ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு முறைக்கு பலமுறை நாம் கோரிக்கை விடுத்தும் இதுவரை அது நடக்கவில்லை. பாதர் ஜோ நிரப்பல், முல்லைப் பெரியாறு அணையை அடுத்து இருக்கும் சப்பாத்திலுள்ள தேவாலயத்தின் முன்பாக ஆரம்பித்து வைத்த முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான விஷம கருத்துக்களை தொடர்ச்சியாக எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த ரசல் ஜோய் எந்த அடிப்படையில் அண்ணாமலை அவர்களை சந்தித்தார்.
ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையை உடைத்தே தீருவோம் என்று ஹை ரேஞ்ச் சாம்ரக்ஷ்ண சமிதி இயங்கி வரும் நிலையில், இந்த ரசல் ஜோய் ஆரம்பித்த சேவ் கேரளா பிரிகேட் அமைப்பும் அதே வேலையைத்தான் செய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை குறித்த பல்வேறு நிபுணத்துவம் பெற்ற 14 நிபுணர் குழுக்களின் அறிக்கைகளின் ஆய்வின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், தொடர்ச்சியாக அந்த நிபுணர் குழுக்களை இழிவு செய்யும் வேலையில் இறங்கி இருக்கும் நபர் இந்த ரசல் ஜோய் அறிவியலும் தெரியாமல், புவியலும் தெரியாமல், நிலவியலும் தெரியாமல் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக தொடர்ந்து களத்தில் நின்று போராடுவதோடு, இளம் பிஞ்சுகளின் நெஞ்சில் எல்லாம் நஞ்சை விதைக்கும் இந்த ரசல் ஜோயை அண்ணாமலை அவர்கள் சந்தித்தது எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை குறித்து அறிவியல் ரீதியாக தர்க்கம் செய்வதற்கு தயாரா என்று இந்த ரசல் ஜோயிடம் ஒரு முறைக்கு பலமுறை கேட்டிருக்கிறோம். அதற்கெல்லாம் விவாத களத்திற்கு வர தயாரில்லாத இந்த ஜோய், வெற்று வாயால் வடை சுடுவதை இனியும் அனுமதிக்க முடியாது. இடுக்கி அணைக்கு வரும் தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மட்டும் வருவதல்ல என்பதை பட்டவர்த்தனமாக அறிவிக்க வேண்டிய காலகட்டத்தில் இந்த சங்கம் நிற்கிறது.
தேவிகுளம் தாலுகாவில் உள்ள மாட்டுப்பட்டி,குண்டல அணைகளில் இருந்து வரும் தண்ணீர் உள்பட கிட்டத்தட்ட 18 கிளை நதிகளின் தண்ணீர் இடுக்கி அணைக்கு தான் வந்து சேர்கிறது. கேரளாவில் உள்ள பெரிய நதிகளில் ஒன்றான முதிரப்புழையாற்றினுடைய தண்ணீருக்கும், முல்லைப் பெரியாறுக்கும் என்னடா சம்பந்தம்… அந்த முதிரைப்புழா ஆற்றினுடையை தண்ணீரை, கோதமங்கலத்தில் இருந்து இடுக்கி செல்லும் சாலையின் இடதுபுறத்தில் ஒரு அணையைக் கட்டி தடுத்து நிறுத்தி, அதற்கு கீழ் பெரியாறு அணை என்று பெயர் வைத்த உங்களுடைய செயல் அயோக்கியத்தனத்தின் உச்சம். இடுக்கி மாவட்டத்தின் நாற்புறத்திலிருந்து ஓடிவரும் அத்தனை மழை வெள்ள தண்ணீரையும் இடுக்கி அணைக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டு, அங்கு இருக்கக்கூடிய தண்ணீரெல்லாம் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வந்ததாக கதை கட்டிவிடும் இந்த ரசல் ஜோய் போன்ற மன நோயாளிகளை அம்பலப்படுத்தக்கூடிய காலம் வந்து விட்டதாகவே நினைக்கிறேன். இந்த அணைக்கு மேலே இன்னொரு கிளை அணையை கட்டி விட்டு அதற்கும் பெரியாறு ஆற்றினுடைய பெயரை வைத்திருக்கும் கேரள மாநில அரசும்,,, எந்த அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் உபரி நீர் தான் கேரளாவினுடைய மழை வெள்ளத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டுகிறது என்று புரியவில்லை.
நிலவியல் ரீதியாக முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா உருவாக்கி வைத்திருக்கும் பொய் சித்திரங்களை கிழித்தெறிவோம். அந்த வேலையை செய்தாலே ரசல் ஜோய் போன்ற மனநோயாளிகள் பாதர் ஜோ நிரப்பலை போல அமெரிக்காவிற்கு சென்று தங்கிவிட வாய்ப்பு நிறையவே இருக்கிறது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அண்ணாமலை அவர்கள் எங்கள் வினாக்களுக்கு விடையளிப்பார் என்று நம்புகிறோம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
வ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.