வெள்ளம் பாதித்த பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதில் மைதா மாவு!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதில் மைதா மாவு! அதிகாரிகள் கொடுத்ததை தான் தூவினோம்…

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்யும் போது பேரூராட்சி ஊழியர்கள் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவை தூவிச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

புயல் பாதித்த செங்குன்றம் பகுதி
செங்குன்றத்தில் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகளை, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மேற்கொண்டது. இந்நிலையில் நேற்று காலை, தெருக்களில் தேங்கியிருந்த குப்பைக் கழிவுகளை அகற்றி, கிருமிநாசினி ‘பவுடர்’ துாவும் பணியை தூய்மைப் பணியாளர்கள் செய்தனர். இதனால் கொசுத்தொல்லை குறைந்து பூரான், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் அச்சுறுத்தல் இருக்காது என மக்கள் நிம்மதி அடைந்தனர்.

ஆனால் செங்குன்றம், டாக்டர் வைத்தீஸ்வரன் தெரு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுவட்டாரங்களில் துாவப்பட்ட பவுடர் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை கையில் எடுத்து பார்த்த போது, எந்த உறுத்தலுமின்றி இருந்தது. அதை முகர்ந்து பார்த்த போது, மைதா மாவின் வாசம் தெரிந்தது.

துாய்மைப் பணியாளர்கள் கொண்டு வந்த மூட்டையை சோதித்த போது, அதில் பேக்கரிகளில் பிஸ்கட், ரொட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மைதா மாவு இருந்தது. அவர்களிடம் விசாரித்த போது, பேரூராட்சி அதிகாரிகள் கொடுத்ததை தான் தூவி வருவதாக கூறினர். ‘பிளீச்சிங்’ பவுடருக்கு மாற்றாக, மைதா மாவு தெளித்த நாரவாரிக்குப்பம் பேரூராட்சி ஊழியர்களின் செயல் சமூக வலைதளங்களில் பரவி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!