
தெப்பத் திருவிழா நடத்துவது ஏன் தெரியுமா?திருப்பரங்குன்றத்தில் கோலாகலம்!
தெப்பத் திருவிழா என்பது இந்து சமய கோயில்களின் குளங்களில் நடத்தப்படும் ஒரு திருவிழாவாகும். திருவிழா நாளில் இறைவனை தெப்பத்தில் வைத்து குளத்தில் மிதக்க விடுகிறார்கள். தெப்பக்குளத்தின் நடுவே இருக்கும் நீராழி மண்டபத்தை சுற்றி தெப்பத்தில் இறைவனை வைத்து வலம் வந்து விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை கோயில்களில் தெப்பத் திருவிழாவை கொண்டாடுகிறார்கள். தெப்போத்ஸவம், தெப்ப உத்ஸவம், மிதவை திருவிழா என்ற வேறு பெயர்களாலும் இந்தத் திருவிழா அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் பல கோயில்களில் தெப்போத்ஸவம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. விழாவின் ஒரு பகுதியாக கோயில்களின் பிரதான இறைவன் அலங்கரிக்கப்பட்டு கோயில் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
தெப்பத்தின் அடிப்பகுதியில் காலி பீப்பாய்களை வரிசையாக இணைத்து அவற்றின் மீது மூங்கில்களையும் மரங்களையும் கட்டி தெப்பத்தினை உருவாக்குகிறார்கள். இதன் மீது சித்திரத் தட்டிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை இணைக்கிறார்கள். பெரும்பாலும் இரவு வேளைகளில் தெப்பத் திருவிழா நடைபெறுவதால் வண்ண மின்விளக்குகளால் அலங்காரமும் செய்யப்படுகிறது. சித்திர தட்டிகளால் மண்டபம் போல உருவாக்கப்பட்ட அமைப்பின் நடுவே இறைவனை வைத்து குளத்தில் வலம் வருகிறார்கள்.
அதில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் தெப்பத் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. அந்தத் திருவிழா அங்கு மூன்று நாட்கள் நடைபெறுகிறது. திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தெப்பத்தின் நீளம், அகலம் 50 அடியாகும். உயரம் சுமார் 42 அடி. பிரம்மாண்டமாக இந்தத் தெப்பம் அமைக்கப்படும்.
சிறப்பு வாய்ந்த திருக்குளத்தில் தெப்பமானது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரவு நேரத்தில் நீரில் மிதந்து வரும்போது காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஒரு திருக்கோயிலே குளத்தில் மிதந்து வருவது போன்ற காட்சியைக் கொடுக்கும்.
திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலிப்பு.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், பச்சைக் குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தெருவிதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.
விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று தெப்ப முட்டுதள்ளுதல் மற்றும் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தெப்ப திருவிழா நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளினார்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானை உடன் எழுந்தருள தெப்பத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தெப்பக்குளத்தை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல இரவில் மின்னொலியிலும் சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி சன்னதி தெருவில் சூரசம்கார லீலைநடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவிற்கான ஏற்பாடுகளைதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வன்,பொம்ம தேவன் ராமையா மற்றும் கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.